Jul 21, 2013

உயிரில்லாத மரியான் - (2013)



டிஸ்கி : மரியான் ஒரு காவியம், தமிழில் ஒரு உலக சினிமா, விருதுகளை அள்ளிக்குவிக்கப்போகும் படம், உலக அளவில் தமிழுக்கு ஓர் அடையாளம் ஏற்படுத்த போகும் படம் – இப்டிலாம் உங்களுக்கு தோணுச்சுன்னா உங்களுக்கு ஒரு பெரிய கும்பிடு. தயவுசெய்து இங்கனயே அப்பீட்டாகும்படி தாழ்மையுடன் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன். இதையும் மீறி படிச்சுட்டு வருத்தப்பட்டு, கோவத்தில் கத்துனீங்கன்னா வரப்போகும் பின் விளைவுகளுக்கு கம்பெனி பொறுப்பேற்காது என மிக மிக தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

மரியான் படத்தை எந்த அளவு எதிர்பாத்து காத்துட்டு இருந்தேன்னு, சொல்லி புரிய வைக்க முடியாது. இந்தப் படத்தோட டீசர் என்னிக்கு வந்துச்சோ அன்னிலேர்ந்து பயங்கர எதிர்பார்ப்பு. என்னிக்கு ரிலீஸ் ஆகும் எப்ப படம் பாக்குறதுனு ஒரு பரபரப்புலயே இருந்தேன். வித்தியாசமான கதைக்களம், கடல் பற்றிய படம், தனுசின் வித்தியாசமான நடிப்பு, ரகுமானின் இசை, ஆப்பிரிக்க வில்லன் என ஒவ்வொரு விஷயமும் அவ்ளோ எதிர்பார்ப்ப கெளப்புச்சு. அத்தனை எதிர்பார்ப்பும் பரபரப்பும் புஸ்ஸுனு காத்து போன பலூன் மாதிரி ஆயிடுச்சுன்னா எனக்கு எப்டி இருக்கும். ஆனா அதான் நடந்தது.


மரியான் அப்டின்னா சாவே இல்லாதவன்னு அர்த்தமாம். படம் முடிஞ்சு எனக்கு ஒரு விஷயம் தான் தோணுச்சு, உயிர் இருந்தா தானே சாகறதுக்கு. இந்தப்படத்துல உயிரே இல்லியே அப்பறம் எதுக்கு மரியான்னு பேர் வச்சாய்ங்கன்னு தோணுச்சு. படம் முடிஞ்சு கெளம்பறப்ப, டிக்கெட் காச திருப்பிக் கொடுங்கடான்னு வாய் விட்டு கத்தனும் போல இருந்துச்சு. அவ்வளோ வெறுப்பாய்டிச்சு.



கதை என்னானு பாத்தா “ரோஜா” படத்தையே கொஞ்சம் வேற மாதிரி திருப்பிப் போட்டு எடுத்துருக்காய்ங்க. ஹீரோ, ஹீரோயின் ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் லவ் பண்றாங்க. ஹீரோயினுக்காக நிறைய காசு சம்பாதிக்கனும்னு ஹீரோ சூடான் போறாரு. 2 வருஷ ஒப்பந்தம் முடிஞ்சு, திரும்பி போகும்போது, ஹீரோவ தீவிரவாதிங்க கடத்திட்டு போயிடுறாய்ங்க. ஹீரோவ காப்பாத்த ஹீரோயின் போராடுறா. கடைசில அவங்களோட காதல் ஹீரோவுக்கு வலிமைய கொடுக்குது. தீவிரவாதிங்கள்ட்டருந்து தப்பிக்கறாரு.



இவ்ளோ தான் கதை. காதல் கொடுக்கும் வலிமையால், காதலன் காதலிக்காக அத்தனை துன்பங்களையும் தாண்டி, கடுமையான போராட்டத்துக்கு பிறகு ரெண்டு பேரும் ஒன்னு சேர்றாங்க. எவ்ளோ அருமையான ஒன்லைன் இது. இத வச்சு எவ்ளோ அருமையான திரைக்கதை எழுதி இருக்க முடியும். உண்மையிலேயே ஒரு நல்ல சுவாரசியமான வெற்றிப்படத்தை கொடுத்துருக்க முடியும். ஆனா இங்க திரைக்கதைல ஒன்னுமே இல்ல. எம்ப்டி ஸ்டோரி.



முதல் பாதில ரெண்டு பேருக்குமான காதலை சொல்லுறாங்க. அதுல ஒரு அழுத்தமே இல்ல. பார்வதி ஏன் தனுச அவ்ளோ வெறித்தனமா காதலிக்கறாங்கறதுக்கு ஒரு அழுத்தமான காரணமே இல்லாததுனால நமக்கு அந்த ஃபீலே வரல. அதே போல உள்ளுக்குள்ள காதல் இருந்தாலும், அவ நல்லா வாழனும்னு நினைச்சு அவ காதலை ஒதுக்கற தனுஷ் கடைசில, அவளை காதலிக்க ஆரம்பிக்கறதுக்கும் வலுவான சீன்கள் எதுவும் இல்ல. ஒரு கிஸ் சீன் ஒன்னு வச்சுட்டா, ரெண்டு பேருக்கும் உள்ள காதலை ஆடியன்சுக்கு புரிய வச்சுரலாம்னு நினைச்சது டைரக்டரோட பெரிய தப்பு.



முதல் பாதி முழுக்க வெகுவாக போரடிக்கும் சீன்கள். டைரக்டர் படம் முழுக்க ஒரு குழப்பத்துலயே எடுத்துருக்கறது தெளிவா தெரியுது. ரெண்டு பேருக்குமான காதலை சொல்லறதா, இல்ல ஹீரோ வெளிநாட்டுல தீவிரவாதிங்கள்ட்ட அனுபவிக்கற கொடுமையை சொல்லறதா, அதுபோல இன்னும் பல பரிமாணங்கள்ல யோசிச்சு எத முதன்மை படுத்துறதுன்னு ரொம்பவே கொழம்பியிருக்காரு. காதலை சொல்ல முயற்சி பண்ணியிருந்தா அதுக்கான சீன்கள்லாம் மனசை தொடற மாதிரி எடுத்து இருந்துருக்கனும். ஆனா அதுக்கு பதிலா ஆயாசமே மிஞ்சுது. ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல. இலங்கை கடற்படைக்கும் தமிழ் மீனவர்களுக்குமான பிரச்சனைய அலசுற படம்னாய்ங்க. ஒரே ஒரு சீனத்தவிர எதயும் காணோம். அதுவும் கூட மனசுல ஒட்டவே இல்ல.



அதே மாதிரி படத்தோட ஆரம்பத்துல தனுசோட அம்மா தனுசுக்கு ஒரு இடத்துக்கு சாப்பாடு கொண்டு வருவாங்க. அப்போ அவரு அங்க வந்திருக்க மாட்டாரு. “இங்க தான சாப்பாடு வர சொன்னான். எங்க போனான்”-னு வெளிப்படையா வாய்விட்டு சொல்லுவாங்க. ரியாக்சன்ல காமிக்க வேண்டியதை ஆடியன்சுக்கு புரியனுமேங்கறதுக்காக டயலாக் பேச வச்சுருப்பாங்க. ரொம்பவே செயற்கையான சீன் அது. அப்பவே தோணிருச்சு. ரொம்பவே அமெச்சூர் தனமா எடுத்துருக்காய்ங்க, போக போக இன்னும் நல்லா இருக்காதுனு. இடைவேளை வரைக்குமே போர் சீன்கள் தான். 




இடைவேளைக்கு பின்னாடி, சூடான் தீவிரவாதிங்கள பத்தி காமிக்குறாய்ங்க. அதுவும் கூட ஒரு அழுத்தமே இல்லாம தான் சொல்லப்பட்டிருக்கு. தீவிரவாதிங்க எதனால அந்த மாதிரி கடத்தி பணம் கேட்டு மிரட்டுறாய்ங்க-ங்கறதுக்கு எந்த சீனும் படத்துல இல்ல. அதே போல சூடான் நாட்டுல வேலை பாக்குற தனுஷ் எந்த மாதிரிலாம் கஷ்டப்பட்டாரு-ங்கறதுக்கும் எந்த சீனும் இல்ல. பிரிவு தான் அவங்கள அந்தளவு கஷ்டப்படுத்துதுனா அதுக்குமே கூட எந்த ஒரு அழுத்தமான சீனும் இல்ல, ரெண்டு பேரும் போன்ல பேசுற அந்த முதல் சீனத்தவிர. இப்பிடி எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாத சீன்கள்னால கடைசில வர்ற க்ளைமாக்ஸ் நமக்கு ஒரு உப்பு சப்பில்லாம பொசுக்குனு போயிடுது.



ஒரு இடத்துல தீவிரவாதிங்க தனுச போட்டு அடிக்க வருவாய்ங்க. அப்போ தனுஷ் “டேய் என்ட காசு இல்லடா.. என்ன விடுங்கடா”ன்னு கவுண்டர் ரேஞ்சுக்கு சொல்ல தியேட்டரே கொல்லுனு சிரிக்குது. ஆக்சுவலா ரொம்ப சீரியஸான சீன் அது. அதே மாதிரி இன்னொரு சீன்ல, தீவிரவாதிங்க தனுஷ்கிட்ட போன் கொடுத்து, அவரோட கம்பெனிக்கு போன் போட்டு பணம் கேக்க சொல்லுவாய்ங்க. உடனே நம்மாளு ஹீரோயினுக்கு போன் போடுவாரு. சூடான்ல எங்கோ தெரியாத ஒரு பாலைவனப் பிரதேசத்துல இருந்து பேசுவாரு, உடனே ஹீரோயின் “நீ எங்கேர்ந்து பேசுற..எங்க இருக்க அத சொல்லு முதல்ல”னு கேப்பா. நமக்கு உடனே “உன் பொடனிக்கு பின்னாடி தான் நிக்குறேன் ஓவர் ஓவர்”னு எரிச்சலோட மைண்ட் வாய்ஸ் வர்றத தடுக்க முடியல.

இன்னொரு சீன்ல தனுசும், அவரோட ஃப்ரண்டும் தீவிரவாதிங்க கிட்டருந்து தப்பிக்க முயற்சி பண்ணுவாங்க. அப்போ ரெண்டு பேரும் தரையில ஊர்ந்து போயிட்டு இருக்கறப்ப, “டேய் தம்பி.. இப்ப இங்க ஒரு க்ரூப் போனாய்ங்களே.. அவிய்ங்க போயிட்டாய்ங்களானு பாத்து சொல்லு” “டேய் நீ இங்க தான் இருக்குறியா..” “அய்யய்யோ.. இந்த ஊர்ல மெயின் ரோடு எங்க இருக்குனே தெரிலயே..சுத்தி சுத்தி ஒரே தெருவுல ஓடிட்டு இருக்கோம்”னு வடிவேல் காமெடிய ஃப்ரண்டு ஒருத்தன் (பாண்டி) ஞாபகப்படுத்திட்டான். அவ்ளோ சீரியஸான அந்த சீனுக்கு விழுந்து பொரண்டு சிரிச்சுட்டு இருந்தோம். பக்கத்துல உக்காந்துருந்தவய்ங்களும் சிரிச்சுட்டு இருந்தாய்ங்க.



படத்துல எனக்கு பிடிச்ச விஷயம்னா அது இசை. அதுவும் “கடல் ராசா”, “நெஞ்சே எழு” இந்த ரெண்டு பாட்டும் ரொம்ப பிடிச்சுப் போச்சு. கடல் ராசா ரொம்பவே ரசிச்சேன். ரகுமான் இசைல யுவன் பாடுன பாட்டு அது. மத்தபடி பிண்ணனி இசை ஓக்கே ரகம். படத்துல பாராட்டத்தக்க இன்னொரு விஷயம் ஒளிப்பதிவு. கடலுக்குள்ள மீன் பிடிக்கற சீன், ரொமான்டிக் சீன், சூடான் பாலைவன சீன்கள்னு படம் பூராவுமே ரொம்ப மெனக்கெட்டு எடுத்துருக்காங்க.



தனுஷ் நடிப்பு எனக்கு எவ்ளோ பிடிக்கும்னு சொல்லனும்னா நாம “காதல் கொண்டேன்” படத்துக்கு போகனும். “திருவிளையாடல் ஆரம்பம்” நானும் என் தம்பியும் பல தடவை சேர்ந்து பார்த்த படம். “யாரடி நீ மோகினி” இதுவரை 50 தடவைகளுக்கு மேல பாத்துருக்கேன். “மயக்கம் என்ன” படத்துல ஃப்ரேம் பை ஃப்ரேமா தனுஷ் நடிப்ப ரசிச்சுருக்கேன். “3” படம் பல பேருக்கு பிடிச்சுருக்காது. ஆனா அதன் முதல் பாதிய மட்டுமே பல தடவை பாத்துருக்கேன். இந்த மாதிரி தனுசின் நடிப்புக்கு நான் ஒரு பெரிய ஃபேன்.



“மயக்கம் என்ன” படத்துல இடைவேளைக்கப்புறம் ஒரு சீன் வரும். தனுஷ் எடுத்த போட்டோவ இன்னொருத்தன் தான் எடுத்ததா ஏமாத்திருப்பான். இந்த சூழ்நிலையில ஒரு நாள் காலையில பால்கனில இருந்து தனுஷ் பேப்பர் படிப்பாரு. அதுல தனுஷ் எடுத்த போட்டோவுக்கு நேஷனல் அவார்ட் கிடைச்சுருக்கும். அப்போ ஒரு ரியாக்சன் கொடுப்பாரு பாருங்க. தன்னோட போட்டோவுக்கு அவார்டு கிடைச்சுருக்குனு சந்தோஷம் ஒரு பக்கம், அதே சமயம் அதுக்கு க்ரெடிட் இன்னொருத்தனுக்கு போகுதுனு ஏமாற்றம் ஒரு பக்கம், அத தட்டிக்கேக்க முடியலியேனு இயலாமை ஒரு பக்கம்னு எல்லாம் கலந்து மிக்ஸ்டு ரியாக்சன் ஒன்னு கொடுப்பாரு. சான்சே இல்ல. ஆடுகளம் படத்த விடவும் சிறந்த நடிப்பு அது. இன்னிக்கு வரைக்கும் நான் அடிக்கடி ரசிச்சு பாக்குற சீன் அது.



“ஆடுகளம்” படத்துக்கு அப்புறம் தனுசோட நடிப்பு மெருகேறிக்கிட்டே இருக்கு. ஒவ்வொரு படத்துலயுமே நேஷனல் அவார்ட் வாங்ககூடிய அளவுக்கு நடிப்பு. எனக்கு தெரிஞ்சு இப்போதைக்கு தமிழ்ல இளம் நடிகர்கள்ல தனுஷ் தான் சிறந்த நடிகர்னு சொல்லுவேன். மத்த எல்லாருமே இவர்கிட்டருந்து நிறைய கத்துக்கனும். ஒவ்வொரு படத்துலயும் இந்த மாதிரி சிறந்த நடிப்ப கொடுக்கறதுக்கு பின்னாடி, கடுமையான உழைப்பு இருக்கறத மறுக்க முடியாது.



இந்தப்படத்துலயும் குறை சொல்ல முடியாத அளவுக்கு தேசிய விருது நடிப்ப கொடுத்துருக்காரு. ஆனா படத்தோட முதல் பாதி சில இடங்கள்ல ‘ஆடுகளம்’ கருப்பு கேரக்டர் தெரிஞ்சது ஏன்னு தெரில. இல்ல எனக்கு மட்டும் தான் அப்டி தெரிஞ்சதானும் தெரில. படத்துல கவர்ந்த சீன் ஒன்னு உண்டு. அது பல நாள் பசியில இருக்கற தனுஷ் வேற வழியில்லாம புல்-ல அறுத்து திங்கற சீன். அதே மாதிரி புலிகள் கூட வர்ற சீன். கடைசி பாட்டுக்கும் ரொம்பவே மெனக்கெட்டு நடிச்சுருக்காரு. தனுசோட திரையுலக வாழ்க்கையில இந்தப்படம் ஒரு முக்கியமான படமா அமையும். 




பார்வதி. பயங்கரமா நடிச்சுருக்காங்க. ஆனா அதுலாம் எங்க கண்ணுக்கு தெரியுது. படம் பூரா தாவணி இல்லாம வெறும் ஜாக்கெட் மட்டும் போட்டு நடிச்சு நம்மள கவர்றாங்க. டைரக்டர், பார்வதியோட நடிப்ப நல்லா யூஸ் பண்ணிக்கிட்டாரோ இல்லியோ, லோ ஆங்கிள் ஷாட் நிறைய வச்சு நல்லா ‘யூஸ்’ பண்ணிக்கிட்டாரு. சத்தியமா நடிப்பு ரெண்டாம் பட்சமா தான் தெரியுது. அதே மாதிரி பூ படத்து பார்வதிய விட இதுல பல மடங்கு அழகா காமிச்சுருக்காங்க.



சொல்லிக்கறா மாதிரி வேற எதுவும் இல்ல. கஷ்டப்பட்டு நடிச்ச தனுஷ், பார்வதியோட நடிப்பெல்லாம் விழலுக்கு இறைத்த நீர் மாதிரி தான் (பழமொழி கரெக்டு தான?) அத்தனையும் வேஸ்ட்டா போச்சு. ஒளிப்பதிவு, இசை, நடிப்பு, அவ்ளோ பேரோட உழைப்பு அத்தனையும் ஒரே ஒரு காரணத்தால வேஸ்ட் ஆயிடுச்சு. அது அழுத்தமில்லாத, தொய்வான திரைக்கதை. ஒரு படத்தோட வெற்றிக்கு காரணமா ஒரு டீம் வொர்க் இருக்கலாம். ஆனா அதே படம் தோல்வி அடைஞ்சா அதுக்கு முழு காரணமும் டைரக்டர தான் சேரும். அவர் தான் பொறுப்பேற்கனும். ஏன்னா படத்துக்கு தேவையான விஷயங்கள்ல கவனம் செலுத்தாதது, டெக்னீசியன்கள்ட்டருந்து தேவையான வேலை வாங்க தெரியாதது ஒரு டைரக்டரோட தப்பு தான்.

ஆக மொத்தத்துல, எந்தளவு எதிர்பாத்து இருந்தேனோ அந்தளவு ஏமாற்றத்த இந்தப்படம் கொடுத்துருச்சு. ஆனா புதுமையான கதைக்களம். அதுக்காகவாவது டைரக்டர நாம பாராட்டியே ஆகனும். ஆனா தன்னோட முயற்சியில, எதிர்பார்ப்ப பூர்த்தி செய்யலனு தான் சொல்லுவேன். தன்னோட தவறுகளை எல்லாம் திருத்திக்கிட்டு அடுத்த படம் இன்னும் நல்லா தருவாருனு நம்புவோம். 

இந்தப்படம் பத்தின அத்தனை கருத்துகளும் என்னோட தனிப்பட்ட ரசனை சார்ந்தது. ஒருவேளை உங்களுக்கு படம் பிடிக்கலாம். பாத்துட்டு எப்டி இருக்குனு சொல்லுங்க.



மரியான் : பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் பரத்பாலா..!!

10 comments:

  1. Replies
    1. யாரப்பா இது அனானி ??

      ஒரிஜினல் பேர்ல வந்தீங்கன்னா இன்னும் சந்தோஷப்படுவேன்.
      கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி.. :) :)

      Delete
  2. நான் இன்னும் பார்க்கல்ல. ஒளிப்பதிவுதான் நல்லா இருக்குது என்று எல்லோரும் சொல்லுறாங்க. அதோட பனிமலரு பனிமலரு என்று உருகி வழியுறாங்க. அந்த புள்ளைக்காண்டியாச்சும் படம் பார்க்கலாம் என்று இருக்கிறேன் :D

    ReplyDelete
    Replies
    1. கரெக்ட்டு பாஸ்,

      அந்தப் புள்ளயப் பாக்குறதுக்காண்டியாச்சும் கண்டிப்பா போங்க.. ஆனா முதல் பாதில தான் ஜாக்கெட்டோட வருவா.. அதோட எந்திரிச்சு வந்துட்டீங்கன்னா உங்களுக்கு நல்லது.. இல்லாட்டி படம் முடியறப்ப எழுப்பி விட சொல்லி யார்ட்டயாச்சும் முன் கூட்டியே சொல்லி வச்சுருங்க.. :) :)

      வருகைக்கு மிக்க நன்றி நண்பா..!!

      Delete
  3. தல,
    அல்மோஸ்ட் எனக்கும் உங்களுக்கும் ஒரே ரசனை தான். ரெண்டு பேரும் படத்தை ஒரே மாதிரி தான் பார்த்து இருக்கிறோம், ரெண்டு பேருக்கும் ஒரே அனுபவத்தை தான் குடுத்து இருக்கு, ஏமாற்றம்.. தனுஷின் உழைப்பு வீண் அடிக்க பட்டு இருக்கு. எனக்கு செகண்ட் ஆப்ல புதுபேட்டை தனுஷ் நிறைய எடத்துல ஞாபகம் வந்துச்சு. பார்வதி அப்பாவா வர கேரக்டர் ரொம்ப நல்ல நடிகர் போல். காமெடியனை விட கேவலமா நடிக்க வச்சு இருந்தாங்க.

    ReplyDelete
    Replies
    1. வாங்க தல,

      இப்போ தான் உங்க ரிவ்யூ படிச்சுட்டு வர்றேன். 100% ரெண்டு பேருமே ஒரே கருத்த தான் சொல்லிருக்கோம்.. :) :)
      ஒவ்வொரு படத்துலயும் தனுசோட நடிப்பு வீணாகறப்ப ரொம்ப கஷ்டமா இருக்கு தல. அடுத்த படமாச்சும் ஹிட் ஆகற மாதிரி நல்ல கதையா இருக்கனும்.
      நீங்க சொன்ன பின்னாடி தான் சலீம் குமார் பத்தி தேடுனேன். சிறந்த நடிகருக்கான தேசிய விருது வாங்குனவராம்.. ரொம்ப நல்ல குணச்சித்திர நடிகர். இவரயும் வேஸ்ட் பண்ணிட்டாங்க..!!

      Delete
  4. எனக்கு படம் பிடித்திருந்தது

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஹேமந்த்,

      சினிமாங்கறது ஒரு கலை வடிவம். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான ரசனை இருக்கும். உங்க ரசனையையும், உணர்ச்சிகளையும் மதிக்கிறேன். படம் உங்களுக்குப் பிடிச்சதுல எனக்கு சந்தோஷம். ஆனா என்னைப் பொறுத்தவரை பெரிய ஏமாற்றம்.

      Delete
  5. அருமையான விமர்சனம்..ஆனா விழலுக்கு இறைத்த நீராய் போய்விட்டது சரியா சொல்லி இருக்கேனா...படத்தப்பத்தி என்ன சொல்றதுன்னு தெரியல...ஆனா மிக மோசமான படம்...

    ReplyDelete
    Replies
    1. கோவை நேரம்,

      தான் சொல்ல வந்தத கரெக்டா சொல்லறதுக்கு டைரக்டர் தவறியிருக்கார்.. அழகான ஒளிப்பதிவு, கிறங்கடிக்கும் இசை, நடிகர்களின் அற்புதமான நடிப்பு அத்தனையும் ஒரு மொக்கையான திரைக்கதையால வேஸ்ட் ஆயிடுச்சி.. எனக்கும் என்ன சொல்றதுனு தெரில.. ஆனா ஒரே ஒரு சந்தோஷம் தனுஷ் நடிப்பு ரொம்பவே மெருகேறிடுச்சு.

      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா..!! மீண்டும் வருக..!!

      Delete

About Me

ஒரு நாளைக்கு ஒரு திரைப்படம் அல்லது ஓரு டிவி எபிசோடாவது பார்க்க வேண்டும் என்பதை கொள்கையாக வைத்துக்கொண்டு அதைக் கடைப்பிடிக்க முயற்சி செய்யும் தீவிர சினிமா ரசிகன் நான். அதை எழுத்தில் கொண்டு வர செய்யும் முயற்சியே இந்த ப்ளாக்.

மேலும் என்னைப்பற்றித் தெரிந்துகொள்ள

Welcome to Killadiranga - எனக்குப் பிடித்த சினிமா பற்றி என் பார்வையில்!!

Contact Me

Name

Email *

Message *