Aug 1, 2014

ஜிகர்தண்டா (2014) - ரகளையான கேங்க்ஸ்டர் ம்யூசிகல்


இந்த வருடத்தில் நான் அதிகமாக எதிர்பார்த்திருந்த படங்களுள் ஜிகர்தண்டாவும் ஒன்று. பீட்ஸாவில் பட்டையைக் கிளப்பியிருந்த கார்த்திக் சுப்பராஜ் இந்தப்படத்தில் என்ன சொல்லப்போகிறார் என்ற ஆர்வமே அதற்குக் காரணம். பட வெளியீட்டில் பல பிரச்சனைகளைச் சந்தித்து ஒருவழியாக இன்று ரிலீஸ் ஆகப்போகிறது என்று தெரிந்தவுடனேயே முடிவு பண்ணிவிட்டேன், முதல் நாள் முதல் ஷோ படத்திற்கு செல்வது என்று. அதிலும் கேங்க்ஸ்டர் கதை என்றதும் எதிர்பார்ப்பு ஒருபடி மேலேயே இருந்தது.

தியேட்டருக்குச் செல்லும் வழியில் ட்ராஃபிக்கில் சிக்கிக்கொண்டதால் முதல் 15 நிமிடங்களைப் பார்க்க முடியவில்லை. இதற்காகவே மறுபடியும் ஒருமுறை படத்திற்குச் செல்லலாம் என்று தோன்றுகிறது. நான் பார்த்த இடத்திலிருந்து படத்தின் கதையைச் சொல்கிறேன்.

சித்தார்த் இயக்குனர் ஆக விரும்புகிற ஒரு நாளைய இயக்குனர். ஒரு கேங்க்ஸ்டர் பற்றிய படம் எடுக்க வேண்டும் என்பதற்காக, உண்மையான ஒரு ரவுடியை நேரில் பார்த்து கள ஆய்வு செய்வதற்காக மதுரை வருகிறார். மதுரையில் கட்டப்பஞ்சாயத்து, கொலை, கொள்ளை என பிரபல ரவுடியாக ஊரையே கலக்கிக்கொண்டிருக்கிற தாதா சேது (சிம்ஹா). தன்னைப்பற்றி பத்திரிக்கையில் எழுதினான் என்பதற்காக, சேது ஒருவனைக் கொலை செய்து எரித்த சம்பவத்தைப் பற்றிக் கேள்விப்படுகிற சித்தார்த், சேதுவை நேரடியாக அணுகாமல் அவனது சகாக்கள் மூலம் அணுக முயற்சி செய்கிறான்.

சேதுவுக்கே தெரியாமல் அவனைப் பற்றி வெவ்வேறு வழிகளில் தெரிந்துகொள்ள முயற்சிக்கும்போது ஒரு இடத்தில் சேதுவிடம் மாட்டிக்கொள்கிறான். பிறகு சேதுவே சித்தார்த்துக்குத் தன் கதையைச் சொல்லி படமாக எடுக்க உதவி செய்கிறான். ஒரு கட்டத்தில் தானே அந்தப்படத்தில் ஹீரோவாக நடித்தால் என்ன என்று நாயகி லட்சுமி மேனனால் தூண்டப்படுகிறான். இதற்கு சித்தார்த் ஒத்துக்கொள்ளாமல் போகவே மிரட்டிப்பணிய வைக்கிறான் சேது. இதற்குப் பிறகு என்ன ஆனது என்பதே கதை என்று ஒற்றை வரியில் முடித்துவிட முடியாது.

நான் இங்கே மேலே சொல்லியிருக்கும் கதை வெறுமனே மேலோட்டமான கதைச்சுருக்கம் மட்டுமே. படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் திரைக்கதையின் பல லேயர்களை அமைத்து ஒவ்வொரு காட்சியையுமே சுவாரசியமாக்கியிருக்கிறார் இயக்குனர். படத்தில் முதலில் என்னைக் கவர்ந்த விஷயம் சிம்ஹா. மனுசன் என்னமா நடிச்சிருக்காரு என்பது போல சேது என்கிற கேரக்டராகவே மாறிப்போனார் அவர். என்னைப் பொறுத்தவரை இந்தப்படத்தின் நாயகன் சிம்ஹா தான். சித்தார்த் இல்லை.



மதுரையின் பிரபல ரவுடியாக அவர் வரும்போது, சூது கவ்வும் படத்தில் நயன்தாராவுக்குக் கோவில் கட்டியவரா இவர் என்று சந்தேகப்படுகிற அளவுக்கு சேது என்கிற தாதா தான் திரையில் தெரிகிறார். அட்டகாசமான நடிப்பு. அலட்டிக்கொள்ளாமல் அல்வா சாப்பிடுவது போல நடித்துள்ளார். ஒரு இடத்தில் கூட அவர் நடித்த வேறு படங்களின் கேரக்டர்கள் நினைவுக்கு வரவில்லை. ஒரு நடிகனுக்கு அதுதானே முக்கியம். அந்தளவு நடை, உடை, பாவனை என்று தன்னுடைய மொத்த பாடி லேங்க்வேஜையும் மாற்றி முழுக்க முழுக்க மதுரைக்காரனாகவே மாறியிருக்கிறார். அவர் வரும் ஒவ்வொரு காட்சியிலும் அனல் தெறிக்கிறது. பந்தயம் கட்டிச் சொல்கிறேன், தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அளவில் ஒரு ரவுண்டு வருவார் இவர்.

சித்தார்த் படத்தின் கதாநாயகன். தனக்கான வேலையைச் செவ்வனே செய்திருக்கிறார். ஆனால் இவரது கேரக்டரை விடவும் சேது கேரக்டருக்குத்தான் அதிக கெத்து என்பதால் இவரது கேரக்டரோடு நம்மால் அதிகமாக ஒன்ற முடியவில்லை. இரண்டாம் பாதியில் படம் முடியும் சமயத்தில் தான் இவருக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இவரது கேரக்டரை இன்னும் கொஞ்சம் செதுக்கியிருக்கலாமோ என்று தோன்றுகிறது.

லட்சுமி மேனன் எப்போதும் போல பொம்மையாக வந்துபோகிறார். முதல் காட்சியில் ஜவுளிக்கடையில் சேலை திருடும்போது மட்டும் சற்றே மனம் கவர்கிறார். சித்தார்த்தைக் காதலிக்கும் வேலையையும், ஒரு முக்கியமான கதைத் திருப்பத்திற்கும் மட்டுமே வந்துபோகிற இவரது கேரக்டர் அந்தளவு மனதில் நிற்கவில்லை. சிம்ஹாவிற்குப் பிறகு அதிகமாகப் பிடித்த இன்னொரு ஆள் கருணா. சித்தார்த்தின் நண்பனாக வந்து படம் முழுவதும் கலகலப்பூட்டுகிறார். இவரும் தமிழ் சினிமாவில் ஒரு பெரிய ரவுண்டு வருவார்.

ஆரண்யகாண்டம் படத்தில் காளையனாக வாழ்ந்த சோமசுந்தரம் இந்தப்படத்தில் ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவர் வரும் காட்சிகள் அனைத்தும் கலகலக்கின்றன. அதேபோல சிம்ஹாவின் அடியாட்கள், லட்சுமி மேனனின் அம்மாவாக வரும் அம்பிகா, அறுவையாகப் பேசி கடைக்கு வருபவர்களை ஓடவைக்கும் பெட்டிக்கடை சங்கிலி, கெஸ்ட் அப்பியரன்சாக வரும் விஜய் சேதுபதி என ஒவ்வொருவரும் தங்கள் பங்கைச் செவ்வனே செய்திருக்கிறார்கள்.

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், முதல் பாதியில் எவ்வளவு ஸ்டைலாக கேங்க்ஸ்டர் வாழ்க்கையைப் பற்றிச் சொல்ல வேண்டுமோ அந்தளவு சொல்லியிருக்கிறார். நாம் இதுவரை க்வண்டின், கோயன் பிரதர்ஸ், ஸ்கார்சசி படங்களில் தான் இப்படிப்பட்ட ஸ்டைலான கேங்க்ஸ்டர் படங்களைப் பார்த்திருப்போம். முதன் முறையாக தமிழில் இப்படியானதொரு படத்தைப் பார்ப்பதற்கே அவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது. முதல் பாதியின் விசுவல்களையும், பிண்ணனி இசையையும், கதையைக் காட்சிப்படுத்திய விதத்தையும் பார்த்துவிட்டு மிரண்டு விட்டேன். இந்தப்படம் கண்டிப்பாக நாயகன், தளபதி, தேவர்மகன், புதுப்பேட்டை படங்களின் வரிசையில் கல்ட் க்ளாசிக் கேங்க்ஸ்டர் படமாக சேரும் என்று என் நண்பர்களிடம் கூறிக்கொண்டிருந்தேன்.

அதே எதிர்பார்ப்போடு அடுத்த பாதியைப் பார்த்தால், இயக்குனர் நம் தலையில் டங் டங்கென்று அடித்து முதல் பாதியில் என்ன உணர்வுகள் கொடுத்தாரோ, என்ன மூட் இருந்ததோ அதற்கு நேர் மாறாக, அப்படியே மொத்தமாகக் கதையைத் திருப்பிப்போட்டு வேறுவழியில் கதையைத் திருப்பிவிடுகிறார். இந்த மாற்றத்தை ஆடியன்ஸ் ஏற்றுக்கொண்டனரா(கொள்வார்களா) என்பதை விட இப்படிப்பட்ட ஒரு மாற்றத்தை ஆடியன்ஸ் ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையோடு படமெடுத்த இயக்குனரின் தைரியத்தைக் கண்டிப்பாகப் பாராட்டியே ஆகவேண்டும்.

ஒவ்வொரு காட்சி முடிந்ததும் அடுத்த காட்சி இதுதான் என்று நாம் ஒன்றை எதிர்பார்த்திருக்கும்போது, நாம் எதிர்பார்த்ததுக்கு நேர்மாறான ஒரு காட்சியை வைத்து சர்ப்ரைஸ் கொடுத்து அசத்துகிறார். இந்த சர்ப்ரைஸ் எலிமெண்ட்கள் இரண்டாம் பாதியின் ஒவ்வொரு காட்சியிலுமே தொடர்வது பலமா இல்லை பலவீனமா என்று சொல்லத்தெரியவில்லை. அது படம் பார்க்கும் ஆடியன்சின் மனநிலையைப் பொறுத்தது. அதேபோல பீட்ஸா படத்தின் க்ளைமாக்ஸில், எப்படி படத்தையே புரட்டிப்போடுமளவுக்கு ஒரு ட்விஸ்ட் இருந்ததோ அதேபோல இந்தப்படத்திலும் ஒரு பெரிய ட்விஸ்ட்டை இரண்டாம் பாதியில் வைத்திருக்கிறார். அதேபோல சினிமாவைப் பற்றிப் படமெடுத்திருப்பதால், அதில் நடக்கும் அரசியலைப் பற்றியும் பகடியாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார். எனக்கு அந்தக் காட்சிகளைப் பார்க்கும் போது ஜே.கே.ரித்தீஸ் தான் ஞாபகம் வந்தார்.

படத்தின் மற்றொரு பலம் வசனம். சிம்ஹா பேசும் ஒவ்வொரு வசனமும் ஈட்டியாக வந்து விழுகிறது. "நம்மைப் பார்த்து பலபேரு பயந்து ஒதுங்கும்போது நமக்கு ஒரு கிக் வரும் பாரு. அதுக்கப்புறம் அப்டியே தொடர்ந்து போயிக்கிட்டே இருக்க வேண்டியதுதான்" என்று தான் எப்படி ரவுடியானேன் என்ற கதையைச் சொல்லும்போது எனக்கும் ரவுடியாக வேண்டும் என்ற ஆசை வந்தது. அந்தளவு கவிதையாக அந்தக்காட்சியை வடித்திருப்பார் இயக்குனர். இன்னொரு காட்சியில், இயக்குனராக ஆசைப்பட்டு அந்த ஆசை நிறைவேறாமல் போய் வயசாகிப்போன பெட்டிக்கடைக்காரர் சித்தார்த்தைப் பார்த்து "நீ தோத்தியா ஜெயிச்சியானு அடுத்தவன் சொல்லக்கூடாது. உனக்குள்ளே இருக்கறவன் சொல்லனும். புத்தியுள்ளவன் ஜெயிப்பான்" என்று சொல்வார். அந்தக்காட்சியும் வசனமும் அருமையாக இருக்கும்.



படத்தின் மிகப்பெரிய பலம் ஒளிப்பதிவும், இசையும் தான். இந்த இரண்டையும் நீக்கிவிட்டால் இது படமே கிடையாது என்று சொன்னால் அதில் மிகையே இல்லை. மதுரையை முழுக்க முழுக்க வேறு கோணத்தில் வெவ்வேறு கலர்டோனில் காண்பித்து படத்தையே ஸ்டைலாக்குவது ஒளிப்பதிவு தான். அதிலும் இடைவேளைக்கு முன்பான காட்சியில், சித்தார்த்தும், கருணாவும் பயத்துடன் அந்த வீட்டிலிருந்து வெளியே வர, வெளியில் சிம்ஹா தன்னுடைய அடியாட்களுடன் கொட்டும் மழையில் கொலைவெறியில் காத்திருக்க, சிம்ஹா துப்பாக்கியை உயர்த்தி சித்தார்த்தை நோக்கி சுடும் அந்தக்காட்சியில் என்னையும் மெய்மறந்துபோய் விசிலடித்து, ரசித்து, அனுபவித்தேன். அந்தக்காட்சியின் ஒளிப்பதிவும், கலர்டோனும், லைட்டிங்கும் அவ்வளவு ஸ்டைலாக இருந்தது.

இந்தப்படம் கேங்க்ஸ்டர் ம்யூசிகல் என்றுதான் விளம்பரப்படுத்தப்பட்டது. அது நூற்றுக்கு நூறு சத்தியமான உண்மை. ஒவ்வொரு காட்சியையுமே பலமடங்கு உயர்த்திப் பிடிப்பதில் சந்தோஷ் நாராயணனின் பிண்ணனி இசைக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. பாடல்களனைத்தும் ஏற்கனவே சூப்பர்ஹிட்டான நிலையில், பிண்ணனி இசையையும் கலக்கலாகப் போட்டு தமிழின் முன்னணி இசையமைப்பாளர்களில் தானும் ஒருவன் என்பதை நிரூபித்திருக்கிறார். அங்கங்கே என்னியோ மோரிக்கோனின் இசை ஞாபகத்துக்கு வந்ததைத் தடுக்க முடியவில்லை. ஒருசில இசைக்கோர்வைகள் இன்ஸ்பிரேஷன் தான் என்பதை உணரமுடிந்தது. ஆனாலும் சந்தோஷ் நாராயணன் இல்லாவிட்டால் இந்தப்படம் சாதாரண படமாகியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

நான் மீண்டும் ஒருமுறை படம் பார்க்க திரையரங்கிற்குச் செல்வேன் என்றால் அது இந்தப்படத்தின் இசை மற்றும் ஒளிப்பதிவுக்காக மட்டும் தான். சாதாரண கதையை ஸ்டைலாக சொன்னதுக்கு இவையே காரணம். கூடவே எடிட்டிங்கும் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆனால் படம் தான் மிகப்பெரிய படமாக இருக்கிறது. 2 மணி நேரம் 51 நிமிடங்கள் ஓடுகிறது. ஆனால் அவ்வளவு நேரமும் போரடிக்கவில்லை என்பது தான் இந்தப்படத்தின் சிறப்பு.

இப்படி இந்தப்படத்தைப் பற்றி சொல்வதற்கு இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன என்றாலும், என்னால் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும். 

பீட்ஸாவில் 8 அடி தாண்டிய கார்த்திக் சுப்பராஜ், ஜிகர்தண்டாவில் 16 அடி தாண்டியிருக்கிறார்.

ஜிகர்தண்டா - கேங்க்ஸ்டர் ம்யூசிகல்

8 comments:

  1. சூப்பரா படத்தை விமர்சனம் பண்ணிட்டிங்க!!!ஏதோ கொரியன் பட காப்பி அடிச்சுவிட்டானுங்களே அப்படி எதாவது இருக்கா என்ன???

    ReplyDelete
    Replies
    1. நான் அந்த கொரியன் படத்தை இன்னும் பாக்கலை. அதனால காப்பியானு தெரில. கேள்விப்பட்ட வரைக்கும் ரெண்டுமே ஒரே ஸ்டோரி லைன் ஆனா வெவ்வேற படங்கள், காப்பி இல்லனு தான் சொல்றாங்க.

      Delete
  2. சிம்ஹாவை நேரம் படத்தில் இருந்தே ரொம்ப பிடிக்கும்!!!

    ReplyDelete
  3. Replies
    1. அப்டி பொத்தாம்பொதுவா சொல்லிர முடியாது

      Delete
  4. மும்பை'ல எங்கே ஓடுதுன்னு தேடிப் பாக்கணும்...

    ReplyDelete
    Replies
    1. தேடிப்பிடிச்சாவது பாத்துருங்க.. கண்டிப்பா தியேட்டரில் மட்டுமே பாக்க வேண்டிய படம்.

      Delete

About Me

ஒரு நாளைக்கு ஒரு திரைப்படம் அல்லது ஓரு டிவி எபிசோடாவது பார்க்க வேண்டும் என்பதை கொள்கையாக வைத்துக்கொண்டு அதைக் கடைப்பிடிக்க முயற்சி செய்யும் தீவிர சினிமா ரசிகன் நான். அதை எழுத்தில் கொண்டு வர செய்யும் முயற்சியே இந்த ப்ளாக்.

மேலும் என்னைப்பற்றித் தெரிந்துகொள்ள

Welcome to Killadiranga - எனக்குப் பிடித்த சினிமா பற்றி என் பார்வையில்!!

Contact Me

Name

Email *

Message *