Nov 29, 2013

4 - டைம் ட்ராவல் படங்கள் ஒரு பார்வை


முந்தைய பகுதி
அடுத்த பகுதி

டைம் ட்ராவல் சீரிசில் இதுவரை டைம் ட்ராவல் படங்களில் உள்ள மூன்று வகைகளையும், டைம் ட்ராவலால் ஏற்படும் பாரடாக்ஸ்களையும், டைம் ட்ராவல் நடந்ததாகக் கூறப்படும் ஒரு ஆதாரத்தையும் பார்த்தோம். அதேபோல முதன்முதலில் டைம் ட்ராவல் பற்றிய கதையை எழுதியது யார் என்றும் கேட்டிருந்தது நினைவிருக்கலாம். அதைப்பற்றி முதலில் பார்த்து விடுவோம்.

டைம் ட்ராவல் நடந்ததைப் பற்றி இலக்கியத்தில் எப்போது முதன்முதலில் குறிப்பு வந்தது என ஆராய்ந்தோம் என்றால், நாம் ஆயிரக்கணக்கான வருடங்கள் பின்னோக்கி செல்ல வேண்டும். சரியான விடையை, போன பதிவின் பின்னூட்டத்தில் நண்பர் ஓமர் ஷெரீஃப், சரியாகக் குறிப்பிட்டிருந்தார். அவருக்கு வாழ்த்துக்கள் (பரிசு கொடுக்கச்சொல்லி வற்புறுத்தினால் ஏழெட்டு இலக்கியப் பதிவுகள், இலவசமாகக் கொடுக்கப்படும் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்).

மகாபாரதத்தில் தான் முதன்முதலில் டைம் ட்ராவலைப் பற்றிய குறிப்பு வருகிறது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, கக்குத்மி (Kakudmi) என்னும் அரசர் குசஸ்தாலி (Kusasthali) என்ற கடலுக்குக் கீழே அமைந்த இராச்சியத்தை ஆண்டு வந்தார். அதற்கு ரைவத நாடு என்ற மற்றொரு பெயரும் இருந்ததால் ரைவதன் என்றும் அழைக்கப்பட்டார். அவருக்கு இரேவதி (Revati) என்றொரு மகள் உண்டு. அழகென்றால் அப்படியொரு பேரழகைக் கொண்டவள் இரேவதி. அவள் அழகுக்கு இணையான ஆணழகன் அந்தப் பிரபஞ்சத்திலேயே அப்போது யாரும் இல்லையாம். (ஆண்டிச்சாமி என்னும் இளவரசன் கிபி 21ம் நூற்றாண்டிலிருந்து டைம் ட்ராவல் செய்து அவளைக் கண்டுபிடித்து தன்பால் காதல்கொள்ளச் செய்தான் என்பது எதிர்காலக்கதை)

இரேவதிக்கு திருமண வயது நெருங்கியதும் கக்குத்மி மிகவும் வருத்தமடைந்தார். அவளுக்கு இணையான அழகுடைய ஆண்கள் யாருமே இல்லையே என்ன பண்ணுவது என்று மிகுந்த குழப்பத்தில் ஆழ்ந்தார். பிறகு, இருக்கிறவர்களிலேயே சிறந்த ஆண்கள் சிலரைத் தேர்ந்தெடுத்து, லிஸ்ட் போட்டு வைத்துக்கொண்டு அதில் யாரைத் தன் மகளுக்கு மணமுடித்து வைக்கலாம் என்று யோசிக்கும்போதுதான் அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. பிரம்மலோகத்துக்கே சென்று, இரேவதியை இவ்வளவு அழகாகப் படைத்த பிரம்மனிடமே, இதைப்பற்றிக் கேட்டால் என்ன என்று யோசித்தார். மானிடர் எவராலும் அப்படி எளிதாக கடவுள்கள் வாழும் பகுதிக்குச் செல்ல முடியாது. ஆனால் கக்குத்மிக்கு மட்டும் அந்த சக்தி இருந்தது.

உடனே இரேவதியை அழைத்துக்கொண்டு பிரம்மலோகத்துக்குச் சென்றார். அவர்கள் சென்ற சமயம், அங்கே பிரம்மா கந்தர்வர்களின் இசைக் கச்சேரியை ரசித்துக் கொண்டிருந்தார். சரி அவரைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கச்சேரி முடியும் வரை இருவரும் காத்திருந்தனர். கச்சேரி முடிந்தவுடன் பிரம்மாவை பணிவுடன் வணங்கிவிட்டு தாங்கள் வந்த நோக்கத்தை எடுத்துச் சொன்னார் கக்குத்மி. தன்னுடைய லிஸ்டில் உள்ள இளவரசர்களின் பெயரை எடுத்துக் காண்பித்துவிட்டு இதில் யாரை இரேவதிக்குத் திருமணம் செய்யலாம் என்று ஆலோசனை கேட்டார்.

அதைக்கேட்டவுடனே, ஏதோ புரோட்டா சூரி காமெடியைப் பார்த்தது போல, கலகலவென சிரிக்க ஆரம்பித்து விட்டார் பிரம்மா. ஏன் சிரிக்கிறார், என்ன விடயமென்று புரியாமல் குழப்பத்துடன் பிரம்மாவையே பார்த்துக்கொண்டிருந்தார் கக்குத்மி. பிறகு பிரம்மாவே கக்குத்மிக்கு, பிரம்மலோகத்தின் செயல்பாடுகளை விரிவாக எடுத்துக் கூறினார். அதாவது பூலோகத்திலும், பிரம்மலோகத்திலும் நேரம் என்பது மாறுபட்ட நிலையில் இயங்குகிறது. இங்கே பிரம்மலோகத்தில் ஒருநாள் என்பது பூலோகத்தின் பல யுகங்களுக்குச் சமம். இந்த இடத்தில், யுகம் என்றால் என்ன என்று (ஒருசிலருக்கு) கேள்வி எழலாம். தெரியாதவர்களுக்காக கீழே உள்ள ஒருசில பாராக்கள். தெரிந்தவர்கள் இந்தப்பகுதியை ஒரே தாவாகத் தாவி கதைக்கு வந்துவிடுங்கள்.

யுகம் என்பது காலத்தைக் கணக்கிட உதவும் ஒரு பொதுவான அலகு. மொத்தம் 4,32,000 ஆண்டுகள் சேர்ந்தது ஒரு யுகம் என்று அழைக்கப்படும். இந்து புராணங்களின்படி நான்கு வகையான யுகங்கள் இருக்கின்றன. அவை முறையே கிருத யுகம், த்ரேதா யுகம், துவாபர யுகம், மற்றும் கலியுகம் என்பனவாம். ஒவ்வொரு யுகமும் வெவ்வேறான கால அளவைக் கொண்டது.

1 யுகம் = 4,32,000 ஆண்டுகள்
கிருத யுகம் = 4 யுகங்கள் (17,28,000 ஆண்டுகள்)
த்ரேதா யுகம் = 3 யுகங்கள் (12,96,000 ஆண்டுகள்)
துவாபர யுகம் = 2 யுகங்கள் (8,64,000 ஆண்டுகள்)
கலியுகம் = 1 யுகம் (4,32,000 ஆண்டுகள்)

பூமியில் இந்த யுகங்கள் சுழற்சி முறையில் வரிசையாக நிகழும். முதலில் கிருதயுகம், பிறகு த்ரேதாயுகம், அதன்பிறகு துவாபரயுகம், பிறகு கடைசியாக கலியுகம் என வரிசையாக நடக்கும். தற்போது கலியுகம் நடந்து கொண்டிருக்கிறது. கலியுகம் முடியும் சமயத்தில் விஷ்ணுவின் கல்கி அவதாரம் தோன்றி தீயசக்தியான "கலி"யுடன் போரிட்டு வெல்வார். பிறகு புதிய உலகம் பிறக்கும். கிருதயுகம் தோன்றும்.

கிருதயுகத்திலிருந்து கலியுகம் வரையிலான, இந்த ஒரு முழுமையான சுழற்சிக்கு சதுர் யுகம் என்று பெயர். மொத்தம் 10 யுகங்களின் கால அளவைக்கொண்டது சதுர்யுகம்.
சதுர்யுகம் = கிருதயுகம் + த்ரேதாயுகம் + துவாபரயுகம் + கலியுகம் = 10 யுகங்கள்.
ஒரு சதுர்யுகத்தின் மொத்த கால அளவை, ஆண்டுகளில் கூறினால் 43 லட்சத்து 20 ஆயிரம் ஆண்டுகள் வரும். இதைப்போல 72 சுழற்சிகள் நடந்து முடிந்தால் அது ஒரு மனுவந்தரம் என்று அழைக்கப்படும். அதாவது 72 சதுர்யுகங்கள் சேர்ந்தது ஒரு மனுவந்தரம். அதேபோல 14 மனுவந்தரங்கள் சேர்ந்தது பிரம்மாவின் ஒரு பகல். மற்றொரு 14 மனுவந்தரங்கள் சேர்ந்தது பிரம்மாவின் ஒரு இரவு. ஆக மொத்தம் 28 மனுவந்தரங்கள் சேர்ந்தது தான் பிரம்மாவின் ஒரு நாள். தெளிவாகப் புரிவதற்கு கீழே பார்க்கவும்.

1 சதுர்யுகம் = 10 யுகங்கள்
1 மன்வந்தரம் = 72  சதுர்யுகங்கள்
1 கல்பம் = 14  மனுவந்தரங்கள் = பிரம்மாவின் ஒரு பகல்
1 மகா பிரளயம் = 14  மனுவந்திரங்கள் = பிரம்மாவின் ஒரு இரவு
1 பிரம்மா நாள் = (1  கல்பம் + 1  மகா பிரளயம்) = 28 மனுவந்தரங்கள்


(அடங்கப்பா சாமி. இதுக்கே மூச்சு வாங்குதே) இதுபோல பிரம்மா மொத்தம் 100 ஆண்டுகள் உயிர் வாழ்வார். அதற்குப் பிறகு இந்தப் பிரபஞ்சமே அழிந்து மறுபடியும் புதிய பிரம்மா பிறப்பார். புதிய உலகைப் படைப்பார். அது மட்டுமின்றி 4 வகையான யுகங்கள் பார்த்தோமில்லையா. அது ஒவ்வொன்றிலும் மனிதனின் ஆயுட்காலம் வேறுபடும். உதாரணத்துக்கு கலியுகத்தின் ஆரம்பத்தில் மனிதனின் ஆயுட்காலம் 100 ஆண்டுகள் தான். ஆனால் மற்ற யுகங்களில் எவ்வளவு எனத்தெரியுமா ?

கிருத யுகம் = மனித ஆயுள் 1 லட்சம் ஆண்டுகள்
த்ரேதா யுகம் = மனித ஆயுள் 10,000 ஆண்டுகள்
துவாபர யுகம் = மனித ஆயுள் 1000 ஆண்டுகள்
கலியுகம் = மனித ஆயுள் 100 வருடங்கள்

கலியுகம் முடியும் சமயத்தில் மனித இனத்தின் ஆயுட்காலம் குறைந்துகொண்டே வந்து 20 ஆண்டுகள் வரைக்கும் செல்லும். அதற்குப் பிறகு உலகம் அழிந்து மீண்டும் கிருதயுகம் பிறக்கும். அதேபோல நற்குணங்களும், பாவங்களும் ஒவ்வொரு யுகத்திலும் வேறுபடும். கிருதயுகத்தில் எந்த பாவமும் இருக்காது. முழுக்க முழுக்க நற்குணங்கள் நிறைந்த யுகம் கிருதயுகம். மக்கள் மகிழ்ச்சியுடன் வாழும் யுகம் அதுதான். அதேபோல மற்ற யுகங்களில்,

கிருத யுகம் = பாவமே இருக்காது. முழுக்க நற்குணங்கள் நிறைந்த யுகம்.
த்ரேதா யுகம் = 1 பங்கு பாவம் + 3 பங்கு நற்குணங்கள்
துவாபர யுகம் = 2 பங்கு பாவம் + 2 பங்கு நற்குணங்கள்
கலியுகம் =  1 பங்குதான் நற்குணம் இருக்கும். மீதி முழுக்க பாவம் நிறைந்த யுகம்.

இப்படி இந்த சுழற்சியில், இப்போது நாம் கலியுகத்தில் இருக்கிறோம். கலியுகம் ஆரம்பித்து 5000 ஆண்டுகள் ஆகிவிட்டதாகக் கூறுகின்றனர். அப்படியே ஆண்டுகள் கடக்க கடக்க, உலகத்தில் பழி, பாவங்கள் அதிகரிக்குமாம். நல்ல விஷயங்கள் எங்குமே நடக்காது. போட்டி, பொறாமை அதிகரித்து ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டு ஒழுக்கமற்ற நிலைமை ஏற்பட்டு உலகமே அழிவுப்பாதையில் இறங்கும். ஆட்சியாளர்கள் மக்களின் செல்வத்தைத் திருடுவார்கள். அவர்களைக் காத்திட மாட்டார்கள். மக்கள் அகதிகளாக நாடு விட்டு நாடு செல்ல வேண்டிய நிலை ஏற்படும். கல்வியறிவு மதிக்கப்பட மாட்டாது. மக்கள் தவறான கருத்துக்களையே ஏற்றுக்கொள்ள முன்வருவார்கள். யாரையும் நம்ப முடியாத நிலை ஏற்படும். பொறாமை எங்கும் நிறைந்திருக்கும். மழை பெய்யாது. நீர் கிடைக்காது. பசி, பஞ்சம் தலை விரித்தாடும். பிச்சைக்காரர்களும், வேலையற்றோரும் நிறைந்திருப்பர். பணம் நிறைய முக்கியத்துவம்  பெறும். இளம்பெண்கள் கற்பை விலைபேசுவர். சிசுக்கள் வயிற்றிலிருக்கும் போதே கொல்லப்படும். உலகம் அழியும். (இதில் அனைத்துமே இப்போதே நடந்துகொண்டுதான் இருக்கிறது. கலியுகம் ஆரம்பித்து 5000 வருடங்களுக்குள்ளேயே இவ்வளவு நடக்கிறதென்றால், போகப்போக என்னாகுமோ ?)

சரி இப்போது கதைக்குள் வருவோம். கக்குத்மியும் அவரது அழகுமகள் இரேவதியும் பிரம்மாவுக்காக காத்திருந்த அந்த சில நிமிடங்களில் 27 சதுர்யுகங்கள் ஓடிவிட்டன. அதாவது மொத்தம் 270 யுகங்கள் முடிந்துவிட்டன. அதற்காகத்தான் பிரம்மா சிரித்தார். "அடடே ரைவத மன்னரே, நீங்கள் லிஸ்ட் போட்டு வைத்திருக்கும் இளவரசர்கள் எல்லோரும் இன்னேரம் இறந்திருப்பார்களே. ஏனெனில் பூமியில் 27 சதுர்யுகங்கள் கடந்துவிட்டன. அந்த இளவரசர்கள் மட்டுமில்லை, அவர்களது மகன்கள், பேரக்குழந்தைகள் என மொத்தப் பரம்பரையுமே இல்லாமல் போயிருக்கும். வேறு யாரையாவதுதான் நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கும். அதுமட்டுமில்லாமல் நீங்கள் இப்போது தனியாகத்தான் இருக்க வேண்டியிருக்கும். உங்கள் மனைவிகள், நண்பர்கள், வேலையாட்கள், படைவீரர்கள், அரண்மனை, சொத்து என எதுவுமே இப்போது இருக்காது. கால ஓட்டத்தில் அவை யாவும் மறைந்திருக்கும். இப்போது பூமிக்குத் திரும்பினால் உங்களை யாருக்கும் அடையாளம் தெரியாது. என்ன செய்யப்போகிறீர்கள்" என்று கேட்டார் பிரம்மா.

'அடேய் பிரம்மா, உன்னைப்போய் பார்த்து, ஆலோசனை கேட்கலாம் என்று வந்தேனே எனக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்' என்று தன்னைத்தானே நொந்துகொண்ட கக்குத்மி என்ன செய்வதென்று புரியாமல் திகைத்தார். அவரது திகைப்பைக் கண்ட பிரம்மா ஆறுதல் கூறி, விஷ்ணுவின் 8 & 9வது அவதாரங்களான கிருஷ்ணன் மற்றும் பலராமன் தற்போது பூமியில் அவதரித்திருப்பதாகவும், அவர்களில் பலராமன் உமது மகளுக்கு ஏற்ற கணவனாக அமைவான் எனவும் கூறி வரம் கொடுத்துத் திருப்பி அனுப்பினார்.

சரி என்று பிரம்மா கூறியதையெல்லாம் கேட்டுக்கொண்ட கக்குத்மியும், இரேவதியும் பிரம்மலோகத்திலிருந்து பூமிக்குத் திரும்பினர். பல லட்சக்கணக்கான ஆண்டுகள் உருண்டோடியிருந்ததால், பூமியில் ஏற்பட்டிருந்த மாற்றங்களைக் கண்டு இருவரும் ஆச்சரியமடைந்தனர். பிறகு பலராமனைத் தேடிக்கண்டுபிடித்து விஷயத்தைக் கூறி இரேவதிக்கும் பலராமனுக்கும் திருமணத்தை நடத்தி வைத்தார் கக்குத்மி. அவ்வளவு தான் கதை.

இதிலிருந்து என்ன தெரிகிறது முதன் முதலில் டைம் ட்ராவல் செய்தவர் நமது கக்குத்மிதான். அதுவும் பல லட்சக்கணக்கான ஆண்டுகள் டைம் ட்ராவல் செய்திருக்கிறார். எனக்குத் தெரிந்து, இப்போது வரும் கதைகளில் கூட இவ்வளவு ஆண்டுகள் எவரும் டைம் ட்ராவல் பண்ணியதில்லை. கற்பனைக்கே எட்டாத அளவுக்கு பல லட்சக்கணக்கான வருடங்கள் டைம் ட்ராவல் பண்ணியதாக மகாபாரதம் கூறுகிறது. அப்படியானால் இதை எழுதியவருக்கு (வர்களுக்கு) எந்தளவு கற்பனை வளம் இருந்திருக்க வேண்டும், உண்மையில் ஆச்சரியப்படக்கூடிய விஷயம் தான்.

நமக்கு இந்தக்கதையிலிருந்து கிடைக்கும் நன்மை என்னவென்றால் நீண்டகாலம் உயிர் வாழ்வது எப்படி என்று தெரிந்துகொண்டோம். கலியுகத்தில் 100 ஆண்டுகள் தான் மனித ஆயுட்காலம். அதனால் நாம் ஒரு டைம் மெஷினைக் கண்டுபிடித்து அதன் மூலம் 4,32,000 ஆண்டுகள் முன்னால் சென்றுவிட்டால், கலியுகம் முடிந்து கிருதயுகம் ஆரம்பித்திருக்கும். அதில் மனித ஆயுட்காலம் 1 லட்சம் ஆண்டுகள். 30 வயதில் நாம் சென்றால் கூட அங்கு செல்லும்போது நமக்கு 30,000 ஆண்டுகளுக்குரிய வாழ்வைதான் வாழ்ந்திருப்போம். மீதி 70,000 ஆண்டுகள் அந்த யுகத்தில் நாம் வாழலாம். அதெப்படி இங்கேயிருந்து நாம் சென்றால் மொத்தம் 100 ஆண்டுகள் தானே வாழ முடியும். எங்கு சென்றாலும் அதே வாழ் நாள்தானே இருக்க முடியும் என்று கேள்வி வரும். இங்கிருந்து அங்கே செல்லும்போது சூழ்நிலைக்கேற்ப நமது உடல்நிலையும், வயதும் மாறும் என்பது எனது அவதானிப்பு. (இதை வைத்து எவ்வளவு அருமையாக ஒரு கதை பின்னலாம் ? என்ன பின்னிருவோமா ?!!)

இதில் யோசிக்கக் கூடிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. இன்னும் பார்க்கப்போனால், இன்றைய நவீன அறிவி(இயற்பி)யலின் படி, டைம் ட்ராவல் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகக் கூறப்படும் ஒருசில விதிமுறைகள் இந்தக்கதையிலிருந்து எடுக்கப்பட்டது போல இருக்கிறது. அதாவது ஐன்ஸ்டீனும், ஸ்டீஃபன் ஹாக்கிங்கும் இப்போது சொல்கிற டைம் ட்ராவல் வழிமுறைகள் இந்தக்கதையுடன் ஒத்துப்போகிறது. எப்படி என்று யாருக்காவது தெரியுமா ? கண்டுபிடிக்க முடிந்தவர்களுக்கு வாழ்த்துக்கள். கண்டுபிடிக்க முடியவில்லையா. கொஞ்சம் காத்திருங்கள். அடுத்த பதிவில் விரிவாகப் பார்த்துவிடலாம்.

அதேபோல பாரடாக்ஸ்கள் பற்றியும் பார்த்துக்கொண்டிருந்தோம் அல்லவா. அதில் ஒரு முக்கியமான பாரடாக்ஸ் பற்றி நாம் தெரிந்துகொண்டே ஆகவேண்டும். ஏனென்றால் அதன்மூலம் நாம் இந்த உலகத்தையே ஆளும் சக்தி பெறலாம். அதேசமயம் உலகை அழிக்கும் சக்தியையும் பெறலாம். இன்னும் சொல்லவொணா பல சிறப்புவாய்ந்த சக்திகள் இதன் மூலம் கிடைக்கும். அப்படி என்ன பாரடாக்ஸ் அது ? ஒரே வாரம் தான். அடுத்த வாரம் வரும் பதிவில் இதைப்பற்றியும் விரிவாகப் பார்த்துவிடுவோம்.

 பின் குறிப்புகள் :
1.இந்தப்பகுதி முகநூல் நண்பர் தினேஷ் லியானுக்கு டெடிக்கேட் செய்யப்படுகிறது.
2.ஒரு யுகம் என்பது 4,32,000 மனித ஆண்டுகள் என்பதை ஒருசிலர் ஏற்க மறுக்கின்றனர். அவர்கள் கூற்றுப்படி ஒரு யுகம் என்பது 4800 ஆண்டுகள் தான். கலியுகம் 5000 ஆண்டுகளுக்கு முன் ஆரம்பித்து, சுமார் 200-300 ஆண்டுகளுக்கு முன் முடிந்துவிட்டது. தற்போது நடப்பது கிருதயுகம் என்கிறார்கள். ஆனால் உலகில் நடக்கும் சம்பவங்களைப் பார்த்தால் எனக்கு அப்படி தோன்றவில்லை.
3."டைம் ட்ராவல் படங்கள் ஒரு பார்வை" என டைட்டில் வைத்துக்கொண்டு இதுவரை ஒரு படத்தைப் பற்றிக்கூட முழுதாகச் சொல்லவில்லையே என கோபப்படும் நண்பர்கள், சற்று பொறுமை காக்கவும். படங்களைப் பற்றியும் வெகு சீக்கிரமே பார்த்துவிடலாம்.

முந்தைய பகுதி
அடுத்த பகுதி
தொடரும்-

9 comments:

  1. தல அருமையான புராணக்கதை & டைம் ட்ராவெல் என்று தெளிவா சொல்லி இருக்கீங்க , அதுவும் இந்த கட்டுரைல பகடி நல்லாவே இருக்கு, குறிப்பா இளவரசன் ஆண்டிச்சாமி :D

    ReplyDelete
    Replies
    1. அது பகடி இல்லை. நடக்கப்போகும் உண்மைச் சம்பவம் :) :) காலத்தை வென்றவன் அந்த இளவரசன் :)

      Delete
  2. யுகம் விளக்கம் சூப்பர்... பாராட்டுக்கள்...

    ReplyDelete
  3. வாழ்த்துகள் நண்பா .. அருமையான பதிவு ..

    ReplyDelete

About Me

ஒரு நாளைக்கு ஒரு திரைப்படம் அல்லது ஓரு டிவி எபிசோடாவது பார்க்க வேண்டும் என்பதை கொள்கையாக வைத்துக்கொண்டு அதைக் கடைப்பிடிக்க முயற்சி செய்யும் தீவிர சினிமா ரசிகன் நான். அதை எழுத்தில் கொண்டு வர செய்யும் முயற்சியே இந்த ப்ளாக்.

மேலும் என்னைப்பற்றித் தெரிந்துகொள்ள

Welcome to Killadiranga - எனக்குப் பிடித்த சினிமா பற்றி என் பார்வையில்!!

Contact Me

Name

Email *

Message *